நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் மைக் சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய ஜனநாயக குரல் கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் கட்சியின் உபதலைவர் ஸப்வான் சல்மான் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஒரு குறுகிய காலத்திற்குள் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி புத்தளம் மாவட்டத்தில் கால்பதித்து, கட்சி நடவடிக்கைகளை ஆரம்பித்தது. புத்தளத்தில் தனித்துவமான சிறந்த அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கும் ஊழலற்ற ஒரு அரசியல் கலாசாரத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற ஒரு கோஷத்துடன் நாம், கட்சி அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.
புத்தளம் மாவட்ட மக்களுக்கு எமது கட்சியும், சின்னமும் புதிதாக இருந்தாலும் ஊழல் செய்யாத, மிகவும் திறமையான, அரசியலுக்கு பழமையான வேட்பாளர்களை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா தலைமையில் களமிறக்கியிருந்தோம்.
எனினும், எமது கட்சி இந்தப் பொதுத் தேர்தலில் கணிசமான அளவு வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
எமது கோரிக்கைகளை ஏற்று, எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த புத்தளம் மாவட்டத்தில் உள்ள மூவின மக்களுக்கும், தேர்தல் காலங்களில் எங்களோடு கைகோர்த்து இரவு – பகல் என்று பாராது தீவிரமாக பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment